பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இன்னினைவகற்றாதீர் என்ற மஹா கவி பாரதியின் கூற்றுப்படி, இந்த பாரத தேசம் பழம் பெருமைகளும், வழமையான வளங்களும், ஆழ்ந்த ஆன்மிக வளங்களும் நிறைந்த பூமியாகும். இப்படியான வழமைகளையும், இந்ததேசத்தின் விசுவாசமிக்க குடிமகன் என்ற நினைப்பையும் மறந்து இருப்பதன் விளைவுதான் இன்றைய கலாச்சார சீரழிவுகள்.
" ஒரு தேசத்தின் நிலையை, அந்த தேசத்தில் பெண்களின் வாழ்க்கை நிலைமைகளை வைத்து உன்னால் சொல்லமுடியும்" என்றார் பண்டிட்.ஜவஹர்லால்நேரு. பெண்கள் அடிமைகளாக இருக்கும் தேசத்தில் மற்றவர்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்பார் ஷெல்லி. வேதகாலம் தொட்டு இந்தியாவில் பெண்கள் சரிநிகர் சமான நிலையையும், மேன்மையான கல்வி அறிவையும் பெற்று விளங்கினர். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் பதஞ்சலி மற்றும் கடயாயனா போன்ற அக் காலத்திற்குரிய கல்வியை, வேத அறிவை பெண்கள் மூலமே பரவலாக்கினர். தேசத்தின் மீதான படையெடுப்புகளுக்குப் பிறகே கலாச்சார சீரழிவும், ஆணாதிக்க மனப்பாங்கும் பரவத் தொடங்கியது. அவற்றின் நீட்சியாக சாதிய வன்கொடுமை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகத் தொடங்கின.
தற்பொழுது தேசம் தழுவிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது சமிபத்தில் டெல்லியில் நடந்த கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை. பாலியல் வன்கொடுமை என்பது நமது தேசம் மட்டுமின்றி உலகின் அத்தனை நாடுகளிலும் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள். இத்தகைய சம்பவங்கள் மற்ற நாடுகளைவிட நமது நாட்டில் குறைவுதான் என்றாலும், சதவிகித கணக்கை சொல்லி சமாதானமாகிவிட முடியாது.
தொழில்மயமாக்கல், உலகமயமாக்கலுக்குப் பிறகு, பெண்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல், ஊடகம், கலை, விண்வெளி, சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தவிர்க்க இயலாத சக்தியாக உருவெடுத்துள்ளனர். அதற்கிணையாக அவர்கள் மீதான துன்புறுத்தல் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் உடல்ரீதியாக, மனரீதியாக மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் கற்பழிப்பு, பாலியல் சுரண்டல்கள், கட்டாய விபச்சாரம், கடத்தல், பெண்சிசுக் கொலை இவற்றைத் தவிர்த்து அவள் வசிக்கும் இல்லங்களிலும் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாகிறாள்.
பாலியல் ரீதியான தாக்குதல்களை எடுத்துக்கொண்டால் பெண்களுக்கு தாங்கள் படிக்கும் கல்லூரி, வேலைசெய்யும் இடம், பொது இடம் போன்ற சூழ்நிலைகளில் துன்புத்தல்கள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய துன்புறுத்தல்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ, விரும்பத்தகாத நடத்தையின் மூலமோ, ஆபாசமான வார்த்தைகள், உடல்மொழி போன்ற பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது.
டெல்லி நிகழ்வும், அதைத்தொடர்ந்து கிளர்ந்து எழுந்த மக்கள் எழுச்சியையும் அசாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் 2010ல் எலந்த 5 மாநிலங்களுக்கிடையிலான ஆய்வில் பாலியல் வன் கொடுமைகளில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. கற்பழிப்பின் தலைநகரமாக டெல்லி மாறி வருவதாக தெரிவிக்கிறார் ஒரு ஆய்வாளர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் உரிய நிறுவனத்திடமோ அல்லது காவல் துறையிடமோ புகாராக பதிவு செய்வது இல்லை. அப்படி பதிவு செய்யும் 69 சதவிகித புகாரில் 20 சதவிகித புகாரில் மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. ஏனைய நிகழ்வுகள் வன் கொடுமைகளில் ஈடுபடுவோரை அடையாளம் காண இயலாததாலும், அல்லது புகாராக பதிவு செய்ய விரும்பாததாலும் வெளியுலகுக்கு தெரிவதில்லை.
சரி. இத்தகைய வன் கொடுமைகளை தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும் சட்டங்கள் இல்லையா? எனக் கேட்டால், இருக்கிறது. ஆனால் பாலியல் துன்புறுத்தளுக்கென பிரத்யேக சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை என்பதுதான். இந்தியாவில் முதன் முதலாக 1997ம் ஆண்டு விசாகா மற்றும் ராஜஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடரப்பட்ட ராஜஸ்தான் மாநில சமூக சேவகி மீதான கற்பழிப்பு வழக்குதான் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ல் உழைக்கும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை வெளிப்படையாகவும், சட்டப்பூர்வமாகவும் அமலாக்க கோரும் சில வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு வழங்கியது. இதைத் தொடர்ந்துதான் 1998ல் ரூபன் தியோர் புகார் மற்றும் ஐ.எ.எஸ் அதிகாரி கே.பி.எஸ்.கில் இடையிலான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கில்லுக்கு உச்சனீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது.
நமது இந்திய அரசியல் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14,15,16,19 மற்றும் 21 ஆகியவை முறையே சமத்துவ உரிமை, இனம், சாதி, பாலினம், போன்றவ ற்றின் அடிப்படையில் பாரபட்சம், சமத்துவ வாய்ப்பு,சுதந்திர உரிமை மற்றும் கண்ணியமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இதன் பின்னர் 2006ம் ஆண்டு மேற்படி பிரிவுகள் 14 மற்றும் 21ன் கீழ் பணியிடத்தில் உள்ள பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்( தடுப்பு, தடை மற்றும் தீர்வு) மசோதா இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 294 மற்றும் 509ன் கீழ்தான் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய பாதுகாப்புகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தாலும் போதிய தீர்வுகள் கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்பாலானோர் கருத்து. இவற்றை வலியுறுத்திதான் தற்போது உச்சநீதிமன்றத்தில் போத்நல வழக்கு தொடரப்பட்டு, மத்திய அரசுக்கு உச்சனீதிமன்றம் மூலம் அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கான சம உரிமை என்பதை அடிப்படையாக்கி ஐ.நா மன்றத்தில் இயற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் அமுல்படுத்தப்பட வேண்டும் என அந்த பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாற்றில், முதல் தகவல் அறிக்கை பதிந்திருந்தால் அவர்களின் பதவியை பறிக்கவேண்டும். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம், அத்தகைய நீதிமன்றங்களில் பெண் அலுவலர்கள், பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க நகரங்கள்தோறும் பெண் காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் ம்ற்றும் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை நீக்குதல் சம்பந்தமான ஐ.நா மன்றத்தின் முடிவுகளை அமுல்படுத்த வேண்டும் என்வனபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளது.
இவையனைத்தும் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த செயல்பாடுகள், கோரிக்கைகள் ஆகும். சட்ட பாதுகாப்பு ஒருபுறம் இருந்தாலும் நமதளவில் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியமாகும். பாலியல் தாக்குதல்களிலிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள முன் எச்சிரிக்கையுடன் செயல்பட வேண்டும். காரணம் தாக்குதல்கள் எங்கிருந்து, எந்த வடிவத்தில் வரும் என கணிப்பது சிரமம். பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோர் தமது பசியைப் போக்கிக்கொள்ள இரையை விரும்பும் விலங்குகளைப்போல் வருவார்கள்.
பெண்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். முக்கியமாக பேருந்து, ரயில் பயணங்களில் செல்போன் போன்ற வகையறாக்களில் கவனத்தை சிதறவிடக்கூடாது. சில தற்காப்பு கலைகளை பயிலலாம். தற்காப்பு பொருட்களை கொண்டு செல்லலாம். கேளிக்கை மற்றும் விடுதிகளுக்கு செல்வோர் உணவுப்பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த விஷயங்களை அயலாரிடமோ, வலைதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவேண்டும். வீட்டிற்கு முகம் தெரியாத நபர்கள் வரும்போது எச்சரிக்கை அவசியம். இவற்றையெல்லாம்விட முக்கியமானது சிகையலங்காரம் மற்றும் உடுத்தும் ஆடை. ஆடைக்குறியீட்டில் கவனமுடன் இருப்பது இக்கால பெண்களுக்கு ஓர் அறிவுரையாகவே கூறாலாம்.
தாய்வழி சமூகமாக இருந்தாலும், தந்தை வழி சமூகம் என கூறினாலும் நாம் நமது மனப்போக்கை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
வெறும் கடுமையான சட்டங்கள் மட்டுமே இச் சமுதாயத்தை சீர்திருத்தம் செய்ய இயலாது. "ஆணும், பெண்ணும் நிகரெனக்கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்பான் பாரதி. அனைவரும் ஓர் நிறை என்ற மனப்பாங்குகொள்வது முக்கியம். உடன் பிறந்தான் ஆண்டான், உடன் பிறந்தவள் அடிமை என்றால் இச் சமூகம் உய்யும் வழி ஏது?
பிறப்பு முதல் மரணம் வரை நூற்றுக்கணக்கான விழாக்களை கொண்டாடுகிறோம். இவ்விழாக்களை கொண்டாட ஒரு அம்மா, சகோதரி, பெண்கள் இல்லாமல் எப்படி செய்யா முடியும்? என கேட்கிறது "ரிக் வேதம்". எனவே அரசாங்கம், பொதுமக்கள், பெண்கள் மீதான பார்வையை, மனப்போக்கை மாற்றிக்கொள்ளச் செய்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். ஏனெனில், கோபி அனான் கூற்றுப்படி, " பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதைக்காட்டிலும் பயனுள்ள வளர்ச்சிக்கான கருவி வேறெதுவும் இல்லை".
*********************************